செவ்வாய், 25 ஜனவரி, 2011

டுபாக்கூர் ராஜாவும் .டயமண்ட் ராணியும்

சென்னையில் போன வருடம் பெய்த அடை மழையின் ஞாபகங்கள் மற்றவர்களிடமிருந்து
எனக்கு முற்றிலுமாக வேறுபட்டது.அது வரைக்கும் எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருந்தது.ஏற்கனவே இருந்த அறையை காலி செய்து விட்டு வடபழனி கோயில் பக்கத்தில் ஒரு ஸ்டோரி வீட்டில் இருந்த முத்தண்ணன் உடன் நான் போய் சேர்ந்திருந்தேன்.முத்தண்ணன் என் வருகையினை ரொம்பவும் விரும்பவே செய்தார் என்பது அவர் என் மீது காட்டிய பாசமான அணுகுமுறையிலேயே தெரிந்தது.மதுரையில் முதலில் பரிச்சயமான பொழுது அவர் காட்டிய அதே அக்கறை,அதே நேசம்.இன்னும் அதுகளில் எதுவும் குறையவில்லை என்பதே பெரும் ஆறுதலாய்இருந்தது.ஒரு உதவி இயக்குனர் ஆக முயற்சித்துக் கொண்டு நான் சென்னை நகரத்து தெருக்களில்
அலைந்து கொண்டு இருந்த கடினமான நேரத்தில் உணவு,உடை என்பதை விட ஒரு நண்பனுடனான உறைவிடம் பெரிய நிம்மதி.
தினமும் காலைல என்னை எழுப்புவதில் இருந்து துவங்கும் முத்து அண்ணனின் உதவிகள்.நான் உற்சாகமிழக்கும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னைதூக்கி நிறுத்தி நம்பிக்கை ஊட்டிமனநிலையை மாற்றுவதை அண்ணன் லாவகமாகவே செய்யும்.சில சமயங்களில் முத்தண்ணன் சொல்லும் சமாதானங்கள் வேறு யாரும் எனக்கு தராதவை.
முத்தண்ணனின் சிற்றன்னை மகன் பாலாவும்சனி ஞாயிறுகளானால்
எங்களது அறைக்கு வந்து விடுவது வழக்கம்.,அந்த மாதிரி சமயங்களில் தீர்த்தவாரி நடப்பதும் சகஜம்.ஓரிரு முறை விடிய விடிய குடித்து விட்டு தூங்காமல் அதிகாலை கிளம்பி பாண்டிச்சேரி போய் வந்ததும் நிகழ்ந்தது.
அன்றைக்கு சனிக்கிழமை இரவு.சீட்டுக்கச்சேரி ஓடிக்கொண்டிருக்க நான்
லேசாய் தலை வலித்ததால் கட்டிலில் படுத்துக்கிடந்தேன்.முரளி,ஜேம்ஸ்,பாலா,முத்தண்ணன்,
பக்கத்து ரூமில் வசிக்கும் நாகராஜ் 5 பேரும் சீட்டுக்களை விசிறி போல் கைகளில் தாங்கிப்
பிடித்திருக்க கதவை யாரோ தட்டினார்கள்.
நான் கதவை திறந்தேன்.எதிரே நின்றது கனகு.
"என்ன மாப்ள...நல்லாயிருக்கியா..?"
கேட்ட படியே தனது கையில் இருந்த பெரிய பையை நாசூக்காக உள் அறையில் போய்
வைத்தான்.பையினை திறந்து அதனுள்ளிருந்து ஒரு லுங்கியை எடுத்து கட்டிக்கொண்டு
நேராக வெளி ரூமுக்கு வந்தான்.
"என்ன முத்தண்ணா..சவுக்கியமா..?ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்கள்ல..?ஒரு
வேலை கிடைக்கிறா மாதிரி இருக்கு சென்னை'ல.அதான் கெளம்பி வந்துட்டேன்."
அவன் எப்போதும் இப்படித்தான்.அடுத்தவருக்கு சந்தர்ப்பமே தராமல் பேசுபவன்.
நான் முறைத்தபடி கேட்டேன்.
"சொல்லாம கொள்ளாம இப்படி வந்து நிக்கிறதாடா..?ஒரு ஃபோன் செஞ்சிருக்கலாம்ல..?"
அவன் சிரித்தான்."நான் கால் பண்ணி சொல்லலாம்னு தான் உன் நம்பர் கேட்டேண்டா மாப்ள..உன் தங்கச்சி செல்வி உன் நம்பர் தெரியாது'ன்னு சொல்லிடிச்சி.."
கனகுவிடம் இருந்து செல்வி என்னை காப்பாற்றி இருக்கிறாள்
"அப்புறம் எப்டிடா ரூம் எல்லாம் கரக்டா கண்டு பிடிச்சு வந்தே..?"
அவன் அப்பாவி போல முகத்தை வைத்து கொண்டு சொன்னான்.
"முத்தண்ணன் கிட்டே கெட்டேன் மாப்ள"
நான் அண்ணனை முறைத்தேன்.அவன் தூங்க துவங்க முத்தண்ணன் பரிதாபமாக
முகத்தை வைத்துக்கொண்டு சொன்னார் "சென்னைக்கு வர்றேன்'ன்னாண்டா தம்பி..உன்னை பாக்க வரணும்'னு சொன்னதால அட்ரஸ் குடுத்தேன் டா நான்"
"பாத்தீங்கள்ல...?இவனை முதல் வேலையா துரத்தணும் அண்ணே."
என்றேன்.என்னால் இதை ஒத்துக் கொள்ளவே முடியாது.கனகு என்ற ஒருவன் பல
முறை எனது பழய ஞாபகங்களின் வெறுப்பு அடுக்குகளில் இருந்து எட்டி பார்த்து
என்னை கேலி செய்வது போலவே தோன்றியது.
விடுரா...?பாவம்.அவன் என்ன பண்ணான்...?"என்றார் அண்ணன்.
மறுநாளில் இருந்து நிம்மதி இழந்தேன் நான் என்று
சொல்லாம்.மழை மழை பேய் மழை.(அப்படி சொல்ல கூடாது டா தம்பி.பேரன்புக்கு பேர்
பேய் மழையா...?தாய் மழை ன்னு சொல்லு...எவ்ளோ அழகா இருக்கு")அது சரி..மழையை
எப்படி குறை சொல்வது...?கனகு வந்த நேரம் என்னால் எதையும் ரசிக்க முடியவில்லை.
அறையிலேயே முடங்கி கிடந்தோம்.
இன்னிக்கு நான் சமைக்கிறேன் ன்னு சொல்லி சமையலை
ஆரம்பிச்சான்.எனக்கு ஒண்ணும் பெரிசா பிடிக்கலை.முத்தண்ணனும் பாலாவும் கனகு
செஞ்ச சிக்கன் குழம்பயும் கோலா உருண்டையயும் ரொம்ப ரசிச்சாங்க.பாராட்டி
தள்ளீட்டாங்கன்னு தான் சொல்லணும்.எனக்கு ரொம்ப ஒண்ணும் பிடிக்கலை.
மறு நாளில் இருந்து ஆரம்பிச்சது அவன் அட்டகாசம்.முத்தண்ணனை
கைக்குள்ள போட்டுக்கிற வழியை மெல்ல கண்டு பிடிச்சான் கனகு.காலைல சீக்கிரம்
எழுந்து ரூமை கூட்டுறானாம்.நீட்டா வெச்சுக்கிறானாம்.குடி தண்ணீ வாங்கி வெக்கிறானாம்.
சமைக்கிறானாம் எல்லாத்துக்கும் மேலா....சரியான ஏமாத்துக்காரன்.பொம்பள செய்யுற
வேலைய எல்லாம் ஒருத்தன் ஆம்பள எதுக்காக பாக்கணும்..?இல்லை எதுக்காக
பாக்கணும்'னேன்..?
இந்த முத்தண்ணனும் இப்பல்லாம் எதுக்கெடுத்தாலும்"தம்பி...கனகு தம்பி
கனகு"ங்கிறாரு..எனக்கு பத்திக்கிட்டு வருது.போன மாசம் ஒரு நாள் எனக்கு நல்லா
ஞாபகத்தில இருக்கு.சனிக்கிழமை நைட்டு.சீட்டு கட்டை எடுத்து கலைச்சு ரெண்டு
கைலயும் பிடிச்சு விர்ருன்னு ஒண்ணு சேக்குறேன்.வழக்கமா நான் இப்படி பண்ணதுமே
முத்தண்ணன் என் தலையை கலைக்கும் செல்லமா..என்னை பாராட்டுறா மாதிரி.
அன்னிக்கு வழக்கத்துக்கு மாறா,"தம்பி கனகு'ங்கிறாரு
அவனும் என் கைல இருந்த சீட்டு கட்டை தான் வாங்கி என்னென்னமோ வித்தை எல்லாம்
செய்யுறான்.சும்மா சொல்ல கூடாது.நல்லா தான் செஞ்சான் வலது கைய்யை ஆட்டி"டுபாகூர்
ராஜா"ங்குறான்...தொறந்தா இஸ்பேடு ராஜா....இடது கைய்ய மூடி இப்ப பாரு டயமண்டு
ராணி"ன்றான்.தொறந்தா அதே ராணி".....
. அதுக்கு அடுத்து முத்தண்ணன்செஞ்சது தான் எனக்கு எரிச்சலாயிடுச்சு.என்னை செய்யுறா
மாதிரியே அவன் தலையை செல்லமா இல்லைன்னாலும் அதே மாதிரி கலைக்கிறாரு
நண்பா....எனக்கு எப்படி இருக்கும்...?

ராசாங்கங்களெல்லாம் ஒரே ஆட்டத்துல தோல்வியுற்ற பாண்டவர்
ப்ரதர்ஸ் நிப்பாங்களே அது போல நின்றேன்.முத்தண்ணன் கண்டுக்கவே இல்லை.அவருக்கு
இது ஒன்னும் வித்யாசமா தெரியாம இருந்து இருக்கலாம்.ஆனால் எனக்கு தெரியும் அந்த
வலியும் வேதனையும்.

அப்புறம் நிறைய நடந்துச்சி வரிசையா.என்னை விட்டுட்டு ஒரு வாரம்
சனிக்கிழமை ரெண்டு பேரும் சினிமாவுக்குப் போனது,முத்தண்ணன் ஆபீஸ்'லயே கனகும்
வேலைக்கு சேர்ந்தது.பாலா உள்பட எங்கள் அறைக்கு வரும் வழக்கமான
நண்பர்கள் கூட கனகுவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது.

ஒரு நாள் ஜாடையாக கேட்டேன் அண்ணனிடம்.
"என்னண்ணே,கனகு ரூம் எப்போ மாற்றதா சொன்னான்..?"
அவன் மாறணுமான்னு கேட்டாண்டா தம்பி..நான் தான் அவண்ட்ட
சொன்னேன்..உன்னால ஒரு பிரச்சினையும் இல்லை.உதவி தான்.நீ எங்கயும் போக
வேண்டாம்'ன்னு சொன்னேன்."
கடைசீ வாய்ப்பும் போனது தெரிந்தும் அமைதியாய் இருந்தேன்.
எப்படி இந்த முத்தண்ணனுக்கு புரிய வைப்பேன்...?கனகு நல்லவன்.அனுசரணையானவன்.
என்னை விட நல்லவன்.என்னை விட திறமையானவனும் தான்.நன்றாக பழகுவான்.எல்லாம்
சரி தான்.எனக்கு பொறாமையாக இருப்பதையும்,என்னால் அவனை பொறுத்துக்கொள்ள
முடியவே இல்லை.இன்று நேற்றல்ல....பள்ளி காலம் தொட்டே நான் அவனை வெறுத்தும்
அவன் என்னை விரும்பியுமே இதுகாறும் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் என்று.
அடுத்த ரெண்டாவது நாளே என் ப்ரச்சினைக்கு ஒரு
தீர்வு கெடைச்சது.முத்தண்ணனிடம் சொன்னேன்"அண்ணே எங்க டைரக்டர் சார்
புது ஆபீஸ் லயே ஒரு போர்ஷன் ல என்னையும் இன்னொரு உதவி இயக்குனரையும்
தங்க சொல்லிட்டாரு...நாளைக்கு கிளம்புறேன் நான்"
அண்ணனுக்கும் கனகுக்கும் ரொம்ப சங்கடம்.
திருச்சி ல இருந்து எங்க டைரெக்டர் கிட்ட உதவி இயக்குனரா ஒரு சின்ன பையன்
சங்கர்'ன்னு சேந்து இருக்கான்.தற்சமயத்துக்கு அவனோட ரூம் ல தான் இருக்கேன்.
முத்தண்ணன் கிட்டே சொன்னா மாதிரி ஆபீஸ்ல எல்லாம் ஒன்னும் தங்கலை நான்.
இந்த ரூம் தாம்பரத்துல இருக்கு.சின்ன ரூம்.ஒரு கட்டில் தான்.காமன் டாய்லெட்
வேறு.இப்படி சின்ன சின்ன ப்ரசினைகள் இருக்கு தான்....
இருந்தாலும்...இருந்தாலும்.....நீங்களே சொல்லுங்க நண்பா.....
மனசுக்குள்ள பொறாமையோட ?வெந்து சாகுறத விட...இது எவ்வளவோ மேல்."
என்ன சொல்றீங்க..?


nanri...keetru

கடவுள் பற்றிய 3 கவிதைகள்

1.கதவு பூட்டப்பட்ட
கோயிலின்
இருள் ப்ரகாரங்களில்

ஒன்றை ஒன்று தொட்டுப்பிடித்து
விளையாடுகின்றன
உப கடவுள்கள்.

உள்ளே தனிச்சிறையில்
வீற்றிருக்கும்
மூலவரின் ஏக்கத்தனிமையினை
ஒன்றும் செய்யவியலாது.
*********
2.நாமிருவரும்
நம் நம் கடவுளரின்
பெயரால் உறுதியெடுத்துக் கொண்டோம்.

என் கடவுளை உனக்கு
அறிமுகம் செய்விப்பதாய் நான்
நிச்சயித்தேன்.
நீயும் உன் தெய்வத்தை
எனக்கு பரிச்சயப் படுத்துவதாய்
சத்தியம் செய்தாய்.

இடவல மாற்றத்தின்
ஏதோவொரு விதியொன்றின்
அபத்தத்தில் முடிவுக்கு வந்தது நம் ஸ்னேகம்.

சந்திக்காமலே போயின நம்மிருவரின்
பழைய கடவுள்கள்.
நம்மை மீண்டும்
சந்திக்க செய்ய்யுமா..,
வேறு புதிய கடவுள்கள்...?
********************
3.இன்று ".........."கடவுளின் பிறந்த நாள்.

சிறப்பு தரிசனத்துக்கு
பணம் குடுத்து பாருங்க.
.
பதவில எதும் இருக்கிங்களா..?
அப்ப சும்மாவே பக்கத்துல வந்து பாருங்க.

பணமும் இல்ல..பதவீலயும் இல்லையா...?
அப்படின்னா க்யூ வுல வாங்க...
இல்லைன்னா வெளில போங்க.

ஹேப்பி பர்த் டே டூ யூ.
ஹேப்பி பர்த் டே டூ யூ.

நினைச்சதெல்லாம் நடக்கும்.
சக்தி வாய்ந்த தெய்வம்.

நிசப்தங்களின் காகிதப்பிரதிகள்

இப்போது நினைத்துப் பார்க்கிறேன்
உன் ஆரம்ப வருகைகள்
எனக்களித்த பரவசங்களை.

பாலைவனத்தில் முன்னிழுக்கும்
காலடித் தடங்களாய்
மெல்ல ஊடுறுவின சம்பவங்கள்.

இறுக்கமாகிப் போன
ஸ்னேகிதத்துக்காக நாம்
ஒருவருக்கொருவர் நன்றி பகின்றோம்.

கால காலத்துக்கும்
நீடிக்கப் போகும்
சாஸ்வதங்களில் ஒன்றாக
அடையாளப்படுத்தப்பட்டோம்.

காற்றுக்குமிழி ஒன்றை தாங்கவியலாத
ஊழித்தீயாய்
முடிந்தேறியது சகலமும்.

அமானுஷ்யமாய்
எனது அறையின் தற்போதைய
நிசப்தங்களின் காகிதப்பிரதிகள்
தொலைந்து போயின.

நீ வேறெங்கேனும் துவங்கியிருக்க கூடும்
உனது ஆரம்ப வருகைகளின்
பரவசங்களை.

nanRi...keetru

பிரிதல் 10.

................................................
1, பிறரிடம்
பேசியிருக்க வேண்டாம்.
என்னிடம் சொல்லாதவற்றை.
.................................................................................................................................
2. எப்போதும் நீ வரும்
வழக்கமான வீதியையும்
மாற்றியிருக்கிறாய்.
………………………………………………………………………………………..
3 .அறை மூலையில்
நீ கொடுத்த பொம்மை.
அறை முழுக்க நீ..
.......................................................................................................................................
4. எனக்கும் சொல்லிக்கொடு.
என்ன செய்தாய்..?
என்னை..?
…………………………………………………………………………………..
5. வெளித் தள்ளிக் கதவடைப்பதை
விடவும்
உள்ளே நுழையுமுன்
தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
...............................................................................................................................
6, உனக்கு பதிலாய்
காற்று எழுப்புகிறது.
என் காலைகளை.
................................................................................................................................
7, திறந்து தானிருக்கிறது,கதவு.
நீ தட்டும் ஒசையும்
கேட்கிறது.
………………………………………………………………………………………
8.முதல் மழைக்கும்
கடைசி மழைக்கும்
இடைப்பட்டது வாழ்க்கை.
......................................................................................................................................
9. தூரத்துப் புள்ளி ரயில்
நொடிகளில் கடந்து போகும்.
அடுத்தமுறையும்.
...............................................................................................................................
10.என்னிடம் தான்
வந்து கொண்டு இருக்கிறாய்.
எனைத் தாண்டிச் சென்ற பின்னரும்.
...................................................................................................................................