செவ்வாய், 25 ஜனவரி, 2011

கடவுள் பற்றிய 3 கவிதைகள்

1.கதவு பூட்டப்பட்ட
கோயிலின்
இருள் ப்ரகாரங்களில்

ஒன்றை ஒன்று தொட்டுப்பிடித்து
விளையாடுகின்றன
உப கடவுள்கள்.

உள்ளே தனிச்சிறையில்
வீற்றிருக்கும்
மூலவரின் ஏக்கத்தனிமையினை
ஒன்றும் செய்யவியலாது.
*********
2.நாமிருவரும்
நம் நம் கடவுளரின்
பெயரால் உறுதியெடுத்துக் கொண்டோம்.

என் கடவுளை உனக்கு
அறிமுகம் செய்விப்பதாய் நான்
நிச்சயித்தேன்.
நீயும் உன் தெய்வத்தை
எனக்கு பரிச்சயப் படுத்துவதாய்
சத்தியம் செய்தாய்.

இடவல மாற்றத்தின்
ஏதோவொரு விதியொன்றின்
அபத்தத்தில் முடிவுக்கு வந்தது நம் ஸ்னேகம்.

சந்திக்காமலே போயின நம்மிருவரின்
பழைய கடவுள்கள்.
நம்மை மீண்டும்
சந்திக்க செய்ய்யுமா..,
வேறு புதிய கடவுள்கள்...?
********************
3.இன்று ".........."கடவுளின் பிறந்த நாள்.

சிறப்பு தரிசனத்துக்கு
பணம் குடுத்து பாருங்க.
.
பதவில எதும் இருக்கிங்களா..?
அப்ப சும்மாவே பக்கத்துல வந்து பாருங்க.

பணமும் இல்ல..பதவீலயும் இல்லையா...?
அப்படின்னா க்யூ வுல வாங்க...
இல்லைன்னா வெளில போங்க.

ஹேப்பி பர்த் டே டூ யூ.
ஹேப்பி பர்த் டே டூ யூ.

நினைச்சதெல்லாம் நடக்கும்.
சக்தி வாய்ந்த தெய்வம்.

1 கருத்து:

  1. ஒன்றை ஒன்று தொட்டுப்பிடித்து
    விளையாடுகின்றன
    உப கடவுள்கள்
    **************************************************
    Absolutely Beautiful. மூளையை விட்டு அகல மறுக்கும் வரிகள்!

    பதிலளிநீக்கு