வியாழன், 17 பிப்ரவரி, 2011

சக்திஜோதியின் 3 கவிதை நூல்கள் - ஒரு பார்வை

வெகு காலமாக கவிதைகளை வாசித்து வருபவன் என்கிற செருக்கு, எனக்குள்ளிருந்து அவ்வப்பொழுது வெளிப்பட்டு வந்தே இருக்கிறது. உலகத்திலிருக்க கூடிய அத்தனை கவிதைகளையுமே வாசித்து முடித்தவன் போன்றதொரு அகத்தொனியை அது அவ்வப்பொழுது ஏற்படுத்துவதை வசதியாக மறந்து போயும் இருந்து இருக்கிறேன்.

என் இரட்டை ஆளுமைகளில் நான் தெரிவிக்க மறுக்கும் எனது அகத்தை கட்டமைத்ததில் கவிதைகளுக்கு மிக அதிகமான பங்கு இருக்கிறது என்பது ஒன்றை தவிர,மிகச் சமீபத்தில் தான் எனக்கு எழுத தெரியும் என்பது எனக்கு தெரியும்.

ஆனாலும்,அன்னிய நிலமொன்றில் தவற விட்டபயண ஊர்திக்கு மாற்று வாகனம் ஒன்றை எதிர்நோக்கி,அந்த நிலத்தின் மைந்தர்களுக்கு நடுவிலான கூட்டத் தனிமை ஒன்றில் வெளிப்பட்டு சிதறிவிடுமோ எனத்தேக்கி வைத்த அச்ச அடுக்குகளை எல்லாம் மறைத்து கொண்டு காலம் தின்று கால் கடுக்கும் ப்ரயாணி ஒருவன், எங்கனம் அந்த நேரம் அந்த இடத்தில் கடைவிரித்து தனக்கு தெரிந்த வித்தைகளை அவிழ்த்துக் கொட்டி காசுக்காக கையேந்தும் வித்தகனின் தட்டில் பலமாக தன்னிடமிருக்கும் நாணயங்களில் சிலவற்றை சிந்தி வைப்பானோ...அது போலத் தான் அந்த பிரயாணியை ஒத்த மனநிலை தான் எனக்கு இருந்தது,

சக்திஜோதி என்னும் கவிஞரின் மூன்று கவிதைத் தொகுப்புக்களை அடுத்தடுத்து படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகச் சமீபத்தில்தான்.இதற்கு முன் அவரது எந்த கவிதையையும் படித்ததில்லை என்ற பெருந்தகுதியுடன் அவரது நிலம் புகும் சொற்கள்/கடலோடு இசைத்தல்/எனக்கான ஆகாயம் என்ற மூன்று தொகுப்புக்களை அடுத்தடுத்து படித்து முடித்தேன்.

சூரியனுக்கு மட்டுமல்ல/அதைச் சுற்றிச் சுற்றி வருவது/நான் தானெனஎனக்கும் தெரியும்/ அகத்திலிருந்து கிளம்பி நெற்றியிலறையும் நேரடியான வரிகளில்,காலம் தின்றது போக மிச்சம் கிடைத்த வாழ்க்கையின் நகர்தலை தோற்றப்பிழை என்ற கவிதை சொல்கிறது.

எங்கும் காணோம் நமதன்பின் வெளியை/ஒரே ஒரு முறை என்னைப்பார்/நமக்கான நட்சத்திரத்தை /உன் விழிகளில் இருந்து உருவாக்குகிறேன் அன்பின் நிலம் என்னும் கவிதை மேற்சொன்ன வரிகளை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.சக்தி ஜோதியின் கவிதைகள் அன்பு வயப்பட்டவையாக இருக்கின்றது அதிர்ஷ்டவசமே என்றெண்ணத் தோன்றுகிறது.ஆழ்மனத்தின் எல்லாப் பரப்பிலும் அன்பு ஒரு ஊற்றாகப் பெருகாதவரை இந்த வரிகள் தோன்றச் சாத்தியமே இல்லை.

உன்னைப் பிரிகையில்/பெருகும் துயரத்திற்குக் /குறைந்தது இல்லை/நினைவின் மகிழ்வு.என்கிறார்.சக்திஜோதிக்கு கைவந்திருக்கிற நினைத்து மகிழ்தல் என்பது பெரும்பாலும் ஆண்டாளின் தனிமையின் மொழிச்செறிவுக்கு நிகரானது.படிக்கிறவர்களுக்குள் ஒரு நெகிழ்தலையும் நிறைவையும் ஏற்படுத்தும் சக்தி ஜோதி,அதற்காக கையில் எடுப்பது ஒவ்வொரு முறையும் சாதாரணமான அன்பை, பிரிவை, தனிமையை, காதலை,ஊடலை... இவை காலகாலமாக இலக்கியங்களில் அடித்துத் துவைக்கப்பட்டவையே,இருந்தாலும் அசாதாரணமான ஒரு துயரை,ஒப்பும் மிகுதியும் இல்லாத உணர்வுகளை சொல்ல வரும் பொழுது அதே அன்பும் தனிமையும் வேறு ஒரு வண்ணத்துக்கு மாறிவிடுகின்றன.தொலைந்த குழந்தை கையில் கிடைக்கும் கணத்துக்கு ஒப்பான மகிழ்தல், சக்திஜோதியின் அக உலகில் உலா வரும் பொழுது நமக்கும் இடம் பெயர்கிறது.

காதல் என்ற பொருளை சக்திஜோதி மிக அனாயாசமாகக் கையாள்வது இந்த நிலம் புகும் சொற்கள் தொகுப்பின் முழுமையிலும் நம்மால் உணர முடிகிறது.குறிப்பிட்ட காலத்துக்கு எலும்புகள் நொறுங்கக் காதலித்து முடித்து,அதற்குப் பின்னதான வாழ்க்கையில் எந்த உருவத்திலும் காதலின் ப்ரதிகள் உள்நுழையா வண்ணம் சர்வசித்தமாய் தன்னையே வேவுபார்க்கக் கூடிய மன நடுக்கம் மிகுந்து கிடக்கும் தற்பொழுதைய பொதுமைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறையில், மணல்மேலோடும் பளிங்கு நதியாய் சிலிர்க்க வைக்கிறது சக்திஜோதியின் வரிகளில் காதல்.

இரவு நண்பனாகி வெகு நாட்களாயிற்று என்கிற வரிக்குள் இருக்கும் இரவுக்கும் தனக்குமான புரிதலை அழகுறச் சொல்கிறார்.அந்தரங்க முகம் கவிதையில்.

.நீங்குதல் கவிதையில்.நீ/வந்து நீங்கியபின்/உடல் தணலாகக் கொதிக்கின்றது/பின்/உன் நினைவுக்காற்று/என்னைக் குளிர்விக்கக்க/என்னை மீட்டுக் கொள்கின்றேன்/அந்த இரவில்.காமத்துக்கும் காதலுக்குமான இயல்பான இடைவெளியில் ஊடுருவும் கண்ணாடி இழைகளை,இலகுவாகக் கட்டவிழ்க்கின்றன இந்த வரிகள்.அழகுணர்ச்சி விரவ அதே நேரத்தில் மொழியைக் கடந்து போகிற படைப்பாளி என்னும் பொறுப்புணர்வை நன்கு புரிந்தவராய் கவிதைப்படுத்துகிறார்.

மனத்தட்டுப்பாடில்லாத மனம் தராத மகிழ்வை, வெட்கத்தை வெறும் ஒரு பெயர் தருவதாக கிளர்ந்தெழுகிறார். என்னோடு கலந்தால் என்னை அறிந்து கொள்வது எளிதென உனக்குச்சொல்வதற்கு ஒருவரும் இல்லையா? என வினவுகையில் தனிமையில் தாபத்தின் நீட்சியை நம் கண் முன் நிறுத்துகிறார்.

உனது முத்தம் பெருகி அதில் மூழ்கிக்கொண்டிருக்கும் என்னை உனது இன்னும் ஒரு முத்தத்தை தவிர எது காப்பாற்றும்..? என்கிறார் முத்தம் என்னும் தலைப்பில்.ஒரு குமிழியை இன்னொரு குமிழி துரத்திச் சென்று அதை உடைத்து தானும் உடைபடுவதை சிதைவு என எங்கனம் கொள்ள முடியாதோ...அது போன்ற தரிசனம் தான் முத்தத்தின் வாயிலாக நமக்கு ஏற்படுகிறது.

இவையெல்லாவற்றையும் தனக்குள் விழுங்கிக்கொள்வது போல் ஒவியம் என்கிற கவிதை....

என்னைச் சித்திரமாக
வரைந்து கொண்டிருக்கும்
உனக்குத் தெரியாது

நான்
எத்தனை முறை
வரையப் பட்டுள்ளேன் என்பதும்

ஒவ்வொரு முறையும்
என் முகம்
எவ்வாறு மாறிப் போனது என்பதும்

நான்
யார் யாருக்கோ அடையாளமாக
இருக்கையில்

உன் நினைவில்
என்னிருப்பை உணர்கின்றேன்.

நீயும்
ஒரு சித்திரத்தை வரைந்து விடாதே.

இதன் ஆரம்ப வரிகளின் அழகான எதிர்மாறலாய் முடிவு வரிகள் இருப்பது சக்திஜோதியின் மொழிவன்மையை பெரிதாய் புலப்படுத்துகிறது.ஒரு தனிமைக்குள் இத்தனை திடமான உணர்வுகளா என நம்மை வியக்க வைக்கின்றன நிலம்புகும் சொற்கள் தொகுப்பின் கவிவரிகள்.
.........................................................................................................................................................................................................................................


கடலோடு இசைத்தல் என்னும் தனது இரண்டாவது தொகுப்பில் இயற்கையை காதலின் பெருவெளியில் பொருத்திப் பார்க்கிறார் சக்திஜோதி. கடலுக்குள் புகுந்து வெளிப்படும் ஒற்றைக்கணத்தில் பரபஞ்சச் சுவையும் பழமையின் வாசனையும் வெளிப்படுவதாக சிலாகிக்கிறார்.

கடலோடு இசைத்தல் என்னும் கவிதையில் நிலத்தின் கடல் கடலிலும் கடலின் நிலம் நிலத்திலும் கிடப்பதாக சமன்பட்டுத்திப் பார்க்கையில் கடல் என்பதை நம் நிலம் சார் வாழ்க்கையினுள் கொண்டு வந்து விடும் இவரது முன்முடிவு சரியானதே எனத் தோன்றுகிறது."கடல் நிலத்தின் வாசலைத்திறந்து புகுவதையும் கடலின் வாசல் திறக்கையில் நிலம் நிறைகிறதையும்" சொல்லி இப்படி முடிக்கிறார்...."அலை பாடிக் கொண்டிருக்கிறது கடல் பாடல்களை" என.

ஞாபகம் என்னும் கவிதையை தாபம்,காமம்,காத்திருத்தல்,என கலவியின் சகல உள் முகங்களுடனும் அணுகுகிறார்.அவனை நினைவுபடுத்திய கடல் என்னும் பிரதேசத்தை அச்சத்துடன் கவனிக்கும் சக்திஜோதியின் கவிமனம்...அந்த அனுபவத்தை உடனே உலகளாவிய பரவலுக்கு ஆட்படுத்துகிறார்...."கடல்/கரை/மணல்/காலடித்தடங்கள்/கூடவே உடைந்த சிப்பி/ எந்த அர்த்தங்களுமற்று தம் இருப்பிடங்களிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தன".என்கிறார்.

கலாப்ரியா, ஆத்மாநாம், கல்யாண்ஜி, போன்ற பல்லாண்டு காலம் எழுத்தால் அறியப்பட்ட கவிஞர்களின் வரிசையில் சக்திஜோதியைக் கொண்டு பொருத்தலாம் என்பது மேற்சொன்ன கவிதை நமக்கு கொடுக்கக் கூடிய மென் உணர்வு இழைகளாலான அனுபவத்தில் அர்த்தமாகிறது.

பெண்ணின் காதலும் அளவற்ற கொடையாக நிகழும் கலவியும் ஒருவனை"திரும்பவும் நீ நீயாகிவிடாத நிலையடைவாய்"என்னும் "தேன்" என்னும் கவிதை வரிகள் இதற்கு மேல் அடியெடுத்து வைக்கவியலாத கையறு நிலையை காமம் உடல்களற்ற வெளியில் ஏற்படுத்தும் என்ற பொதுமையை உடத்தெறிகிறது..

வலுக்கும் சாரல் தன் மேல் படரும் ஆண் வாசம் என நிலம் வெட்கத்துடன் மலர்வதாக சொல்லும் ஜோதி.., நிலமெங்கும் பாய்ந்தோடும் மழை நீர் நின்றதும் நிலம் தன் உடலை மூடிக்கொண்டு உட்கொண்ட மழை என்னும் பேராண்மையைப் பருகுவதாக சொல்லி..பிறகு மழையே தானாகிறாள் என சொல்லும் பொழுதுசங்க இலக்கியங்களில் மட்டுமே காணக்கிடைத்த காதலின் மாயவித்தையை நம் கண்ணில் நிறுத்துகிறார் காட்சியாக்கி.

அலைந்து திரிகிற பறவை/ முத்தத்தை உதிர்க்கிறது/கனவெங்கும். நிலத்தை/அடையவியலாத முத்தம்/வெளியெங்கும்/உதிர்ந்து கிடக்கிறது/பின்னிரவின் நிலா
வெளிச்சமாய்.

அந்தரத்தில் புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒட்டிக்கொள்கின்றன, முத்தங்கள்.பின்னிரவின் நிலவொளியாய்.படிப்பவர் நெஞ்சில் கலவையான உணர்வுகளைக் கிளறிவிடக்கூடியதாகிறது.

கடலை அறிந்தவள் என்னும் இன்னொரு கவிதையில் "பேரிரைச்சலைத் தரும்/ அலைகள் கூட /பெருமௌனம் என்பதாகத்தான் /நம்பிக்கொண்டிருந்தேன் .மிக அமைதியான அதே சமயத்தில் மிக உறுதியான வரிகளல்லவா..?

கிளிபுராணம்..கவிதையில்.."கூடடையாத கிளிகள் பல்லாயிரம் ஆண்டுகளாய் பறந்து செல்கின்றன அகன்ற வானில"கிளிகள் சொல்வதை சொல்வதாகவும்,மீனாட்சியின் தோளிலும்,காமாட்சியின் கையிலும் பல நூறு வருடங்களாய் இருப்பதை பறைசாற்றுவதன் மூலமாக பெண்ணியத்தில் தனதான கருத்துக்களை எடுத்து வைக்கிறார் அமைதியாக.

"வீடு திரும்பி ஆடைகளை மாற்றிக் கொண்டிருக்கையில் மழையின் ருத்ரதாண்டவம் இன்னும் கூடியிருந்தது".தன் மகளோடு மகளாகி மழையில் நனைந்துதான் மகளாயும் அவள் தானாகியும் மாறி குதித்து மழையை நுகர்ந்து முடித்த பின் வீடு திரும்பி விட்ட பிறகும் கவிமனம் மழையை உற்று நோக்குகிறது.அந்த மழையைஅளவெடுக்கிறது.அதனை ருத்ர தாண்டவமாய் காணுகிறது.

"ஒரு துளி கண்ணீர் வழியாக கடந்து செல்கிறது அன்பு. "கடத்தல் என்னும் கவிதையில் "ஒரு போதும் உணர்ந்த அன்பை சொற்களில் வெளிப்ப்டுத்த முடிந்ததில்லை". என்கிற ஆதங்கம் தொனிக்கிறது.

.இந்த கடலோடு இசைத்தல் தொகுப்பில் இறுதியில் இடம்பெறக்கூடியது பெண்மை பற்றிய சில கவிதைகள், வண்ணமயமான உணர்வு களால்பெருக்கெடுக்கிறது.ஊதா நிறப்பயிர்கள்,நீலப்பூக்கள்,பசை நிற உலகம்,ஆரஞ்சு நிறக் காலைப்பொழுது வயலட் கனவுகள்,சிகப்பு தேவதை என நிறங்களின் தனித்த தன்மைகளின் வழியாக ஒரு கதானுபவத்தை நமக்குள் பதிய வைக்கிறது.

பொதுவாகவே சக்திஜோதி என்னும் இக்கவிஞர் பெரும்பாலும் உணார்வுகளின் நுண்ணிய தாக்குதல்களை எடுத்து வைக்கிறார். இவரது கவிதை உலகம் கண்டறிந்த அதிசயங்களை கருப்பொருளாக்க முனைவதே இல்லை எப்பொழுதும். அதீதமான சொல்லாடல்கள்,மொழியின் மாய இருள் நிறைந்த கவிதானுபவம் இவற்றுக்கெல்லாம் முயல்வதே இல்லை சக்திஜோதி... மாற்றாக மிகச் சாதாரணமான எல்லாருக்கும் அனேகமாக எளிதில் கைவரக்கூடிய சொற்களை எடுத்து கொண்டு, காலகாலமாய்க் கவிதைகளில் பலவாறும் கையாளப்பட்ட பொருள்/அனுபவம்/கற்பனை இவற்றையே தானும் தொடுகிறார். இது மிகச்சாதாரணம். ஆனால்...சக்தி ஜோதி, சாதாரணமான இயங்குவெளியை தேர்ந்தெடுத்து, அதை தனது பார்வையால் தனது அனுபவத்தால் அதீதமாக்கி விடுகிறார். இந்த அதீதமானது, அவரது மொழி மேதமையைக்காட்டப் பயன்படாமல், அடக்கி வாசிக்கிறது. செய்திகளாக நினைவில் தங்கிவிடுகிறது.

அவர் கடல்/நிலா/முத்தம்/கிளி/ என எதனை குறித்தாலும்...நமக்கு சக்திஜோதியுடைய கவிதைகளை படித்த பின் நம்முள் அவருடைய கடலும், நிலாவும், கிளியும் வந்து அமர்ந்து கொள்கின்றன. பிரத்யேகங்களான முத்தம், கலவி, காமம், ஊடல், தாபம் போன்றவற்றை பொது நிகழ்வுகளாக மாற்றிவிடும் சாதாரணங்களின் அசாதாரணக் கவிதைகள் சக்திஜோதியுடையது.

பெண் எனும் கவிதையில் இயற்கையை, நிலத்தை, காற்றை, ஒரு பெண்ணாக, அவைகள் போலத் தானும் குளிர்வதையும் வெப்பமுறுவதையும் அவற்றை சொல்ல உரிமை இல்லை எனவும் ஆதங்கப்பட்டும் கவிஞர்... பெற்றெடுக்கும் தாய்மைக்கு கொண்டாட உரிமை இல்லை எனச் சொல்லி பெண்ணியத்தின் சர்வநிச்சயக் குரலொன்றை முன்வைக்கிறார்.

"இந்த பஞ்ச பூதங்களாய் இருக்கிறேன்.எனக்கென சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லை"என முடித்தும் வைக்கிறார். சக்திஜோதியின் அக உலகம் இருள்களற்றது. எல்லா மாடங்களிலும் விளக்கேற்றிவைக்கிறார், தனது கவிதைகளால்.

................................................................................................................................................................................................................................................
காதலும் அதையொற்றி நுழையக்கூடிய ஊடலும் பன்னெடுங்காலமாக கவிப்பொதுப்பொருள்களாயின. காதல் என்பதைக் கையாள்வதில் உள்ள எளிமை கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கமாயி ருந்திருக்கக் கூடும்.ஆனால்,சக்திஜோதி காதலைஒரு சூத்திரமாக்குகிறார்.காதல் நிகழ்த்தக்கூடிய அகமாற்றங்களை அவர் உன்னிப்பாக கவனிக்கிக்கிறார்.காதலை உணர்ந்த பொழுது,காதல் நம்மை விழுங்கி தனக்கான இணக்கமாக மாற்றிவைக்கக் கூடிய இடர் எப்பொழுதும் உண்டு.ஆனால் காதல் என்ற ஒன்றை உட்கொள்ளும்அதே நேரத்தில் தன்னிலிருந்து தான் விலகி நின்று தன்னை நோக்கும் சக்தி ஜோதி,மிக அழகாக வித்யாசப் படுத்தி விடுகிறார்,தனது கவிதைகள் இயங்கும் மனங்களை.இது கைவரப்பெற்றதாலேயே,நிசப்தமாக காதலை அணுக முடிகிற ஜோதிக்கு,அதிர்வுகளற்று ஊடலையும் கையாள முடிகிறது.

எனக்கான ஆகாயம் என்னும் தனது சமீபத்திய தொகுப்பில் முன்னிரு தொகுப்புக்களை விடவும் இன்னும் பலமிகுந்த பிரயோகங்களால் நம்மை சந்திக்கிறார்.

காற்றில் மிதக்கும் துயரம் எனும் கவிதையில்"அன்பைப் பெற காத்திருக்கையில்/மௌனத்தின் ஊடே/ கடந்து செல்கின்ற காற்றில் /மிதந்து கொண்டிருக்கிற காதல் /துயரமாக /கண்களில் வழிகிறது.என காத்திருத்தல் என்னும் கையறு நிலையை மிக அழகாக முன்வைக்கிறார்.

இரண்டு நிலா தெரியும் இரவுகளில்,கலவியின் நிறைவு தரக் கூடிய தனித்து விழித்தலின் அனுபவத்தை அந்த திறந்த விழிகளால் காட்சிப்படுத்துகிறார் ஜோதி. "நதியில் நீந்தும் மீன்களைப் போல/ நினைவுகளில் பயணிக்கிறது /ஒரு சொல்............
......................நீரின் ஒரு பூவைப் பறித்துக் கொண்டு திரும்புகிறேன்/கூடவே நதிக்கரையில் காத்திருந்த தருணத்தையும்."என்கிறார்

தருணம் என்னும் கவிதையில்.உடனுக்குடன் கூடு விட்டுக் கூடு பாய்வதைப் போல,எந்த ஒரு நேரடி அனுபவத்தையும் அது நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதே பன்முகம் கொண்டதாக விரித்து வைக்கும் ரசவாதியாய் தெரிகிறார் ஜோதி.

சமையலறை உலகிலிருந்து என்னும் கவிதையில் எல்லா விதத்திலும் ஒரு பெண் எங்கனம் தனது வீட்டிற்குள் இன்றைக்கும் சிறை வைக்கப்பட்டிருக்கிறாள்.என்பதை எடுத்து வைக்கும் சக்தி ஜோதி .தொலைபேசி/அலைபேசி/கேபிள்காரன்/விற்பனைப் ப்ரதிநிதி என அவளை சந்திக்கிறவர்களின் வாயிலாக இந்த கவிதை நிகழும் காலம் தற்காலம் என்பதை அழகுறப் பதிவு செய்தும் விடுகிறார்.

கணவனுக்குப் பிடித்த உணவை சமைக்கத் தொடங்கும் நவீன வசதிகளின் உடனிருப்பில் சிறை வைக்கப்பட்டிருக்கும் பெண்ணை எடுத்துக்காட்டும் விதம் சப்தமின்றி வலிக்கும் சூட்சுமத்தை கையாள்கிறது.

நிலாக்காலம் எனும் கவிதையில் நிலா வைக்காண இரண்டு வாரங்கள் கொந்தளிப்புடன் காத்திருந்ததாய் தொடங்கும் சக்தி ஜோதி நிலவு உறங்கப் பொன பிறகும் அதை பார்த்துக் கொண்டிருப்பதாகச் சொல்லும் பொழுது,பொது நிகழ்வைத் தனித்ததாக்கி கவிதைப்படுத்துகிறார்.
சதுரங்கத்தை சொல்வதாக இரண்டு ராஜாக்கள் சுகித்திருக்க இரண்டு ராணிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்" என்னும் கடைசி வரியில் அபிப்ராயங்கள் தேவையற்ற பெண்மொழியை முன்னெடுக்கிறார்.

வனத்தின் குரல் என்னும் ஒன்றில்"வனமெங்கும் அதன் வாசனை உன் அருகாமையை நினைவூட்டுகிறது" எனத் தனதான தனிமைக்குள் அவனை எளிதாய்வரவேற்று விடும் அவள் "மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள் நம்மை ஏளனம்செய்வது வனமெங்கும் ஒலிக்கிறது" என சொல்கையில அந்நிகழ்வு இருவரிடைப் பொது வாகிறது,அதனைப் பூர்த்தி செய்கையில்.

எனக்கான ஆகாயம் என்னும் கவிதையில் மழைக்காலத்தில் மழை தவறாமல் வந்து விடுவதை சொல்லும் சக்திஜோதி....நிலவற்ற வானம்/எனக்கு மேலே விரிந்திருந்தது...............................இந்த மழைக்கால//வானம்/வசந்தத்தை தரையில் இறக்கியபடி இருக்க/கிளையில் அமர்ந்திருக்கிறது/ஒரு பறவையென/என் காதல்....................../நான் மிதந்து கடக்கிறேன்/எனக்கான வானத்தை.என மழையின் மேகங்களை அப்புறப்படுத்தி விட்டு தனக்கான ஆகாயத்தை மிதந்து கடக்கும் காதல்பறவையின் சிறகுகளைப் படபடக்க வைக்கிறார்.

முற்றத்தில் /வார்த்தைகளை இறைத்துக் கொண்டிருக்கும் /அவள்/அவனுக்கான /வார்த்தைகளை /நதியில் மறைத்து வைக்கிறாள்./அதை விழுங்கிய மீன்களின் /வயிற்றில் /கல்லாய் உறைந்து கிடக்கின்றன.என்னும் கல்மீன் என்னும் கவிதை சக்திஜோதியின் ஆகச்சிறந்த கவிதைகளில் ஒன்று எனச் சொல்லலாம்.இதன் மொழிச்செழுமையும் நம்மை இந்த வரிகள் கொண்டு சென்று நிறுத்த கூடிய வெளியும் பரவசஉணர்வைத் தருகின்றன.

எதையும் கவிதையாக மாற்றிப் போடக்கூடிய வல்லமை சக்திஜோதியை பிறரிடமிருந்து அன்னியப்படுத்திக் காட்டுகிறது.மொழிவன்மையும்,இயங்கிக் கொண்டே இருக்கக் கூடிய அவஸ்த்தையுமே சக்திஜோதியின் கவிதைகளில் அழகியல் எந்த மிகையுமின்றித் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொள்வதை காண முடிகிறது. இதற்கு முன் என்னும் கவிதையில் /உண்மையில் உனது பிரிவும் சந்திப்பும் என்னுள் நிகழ்ந்திருக்கிறதா/என்னும் வரிகள் ஏற்படுத்தும் அதிர்ச்சி காற்றற்ற குளமொன்றின் ஒரே பழய அலையின் வட்டங்களை தக்கவைத்து
நிகழ்த்தக்கூடியதாய் இருக்கிறது.

"நீர்ப்பறவைகளின் பாதம் பட்டு கலைந்த பாசி மீண்டும் மூடிக் கொண்டது/குளத்தின் ஆழம் ஒரு போதும் தீர்ந்துவிடாத தாகத்தை தருகின்றது/"என்னும் குளத்து நீர் என்கிற கவிதையில் ப்ரம்மாண்டமாய் விரிகிறது கவிவெளி.

நிலவாகும் பறவை என்பதில்"பறவைகளற்ற கூண்டினைத் திறந்ததும் வெளியேறும் நிலவை பின்தொடர்கிறார் வழிதவறிய பறவையைப் போல.

மணல் இல்லாத ஆறு என்னும் கவிதையில்

"ஓலமிட்டு வருகிறது மஞ்சள் நில லாரிகள்.....வேம்புகள் இன்னும் சிறிது நேரத்தில் விழப் போகின்றன.லாரிகள் சுமக்கும் மணல்களில் சிறு நத்தைகள் சுருண்டு மடிகின்றன."

பேரதிர்ச்சியை நமக்குள் வாரிவழங்கியபடி நமக்குள் மண் அள்ளும் லாரிகள் ஓட்டமெடுப்பது தான் இந்த கவிதையின் அலாதி.சமீபத்திய நிகழ்வுகளில் ஒன்றுஆறுகள் மணலுக்காக மழிக்கப்படுவது.ஆனால்,இதை எதிர்காலச் சந்ததியின் ஏதோ ஒருவன் படிக்கும் பொழுது மணல் என்பது அருங்காட்சியகங்களில் எளிதில் காணக்கிடைக்கலாம் என்னும் அபத்தம் நம்மை புரட்டி அடிக்கிறது.

என் சிறுவயது நெற்றியினை அலங்கரித்தது வேங்கை மரப்பொட்டு/
என் குமரிப்பருவத்தை அழகுபடுத்தியது/என் மகளுக்குப் பொட்டிட மரம் தேடுகிறேன். வேங்கை இருந்த நிலம் என்னும் கவிதையின் இடைவரிகள் இவை.

கவிதைகளுக்குள் ஒரு மாபெரிய நாவலை அலட்சியமாகக் கடந்து செல்வது இங்கு இயல்பாய் நிகழ்கிறது. சக்திஜோதியின் தரிசனம் வியக்க வைப்பதாயிருக்கிறது.அடைப்புக்குள் அடங்கக் கூடிய முடிவான கவிதைகள் இவருடையது.பொதுவாக முடிவுற்ற கவிதைகளை படிக்கையில் சாதியமாவது,அது தரும் நேரடி அனுபவம் மட்டுமே.வாசிப்பவனது மனதில் பலகாலம் அது இயங்கிக்கொண்டிருப்பதில்லை.நேரடி அனுபவங்கள் மனதில் அறைபவை மட்டுமே எப்பொழுதும் நீடிக்கும்.ஆனால்..சக்திஜோதி இந்த மரபை உடைக்கிறார்.முடிவுற்ற கவிதைகளை அவர் தன் வசப்படுத்திக்கொண்டு,தான் எழுதியவற்றை முன்வைக்கிறார்.

அனாயாசமாக .பெண்ணியம்,காதல்,இயற்கை,பழமையைப் போற்றுதல், காலம் மனிதனை விழுங்குதல்,சொந்தத் தனிமை, ஊடல்,கானகம், மனசுக்குள் இயங்கக் கூடிய மௌனம்,மாற்றங்களின் அபத்தம்,பிற உயிரினங்களின் மீதான கரிசனம்,சொல்லிலடங்காப் பேரன்பு,
காமம்,கலவி,சார்ந்திருத்தல்,தனித்தியங்குதல்,இன்னும் இன்னும்.....

அவிழ்க்கப்பட்ட பெண் மனம் ஒன்றை மிக அருகாமையில் சந்திக்க முடிகிறது சக்திஜோதி யின் கவிதைகளில். உள்ளுணர்வையும், மொழியறிவையும் கலந்து பிசைந்தால்,கவிதை நெய்யலாம் என்ற கூற்றுக்கான உச்ச பட்ச சாத்தியம் எளிதில் தொட முடியாதது.அதன் ஆரம்பச்சுவர்களைத் தகர்த்தெறிகின்றன.... சக்திஜோதியின் கவிதைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக