வியாழன், 17 பிப்ரவரி, 2011

மூன்று தனிமைகள்

இன்று இரவு..இன்னொரு இரவு

மதுக்கோப்பைகள் நிரம்பி வழியும்
பிரத்யேக இரவின்
புகைசூழ்த்தனிமை
இருளில்
எனக்கு எதிரான காலி இருக்கையை
நீ வந்து
நிரப்ப மாட்டாயா
என
ஏங்கி இருந்தேன்.
வீதி சூடும் பூக்களெல்லாம்
உனதான
நேற்றைய மலர்கள்
என்ற
நீதியறியாமையில்.

................................................................

நிராகரிப்பு

இன்னமும் நுட்பமாக நினைவிருக்கிறது.
எது என்னவென அறியாத
நம் இளம்பிராயத்தில்
என் பொருளொன்றைப் பெற்றுக்கொண்டு
திருப்பித்தந்து விடுவதாகவோ
என்னையும் ஏதோ ஒரு செயலில்
உட்படுத்துவதாகவோ
விட்டுத்தந்ததன் பரிசாக
எதையோ கிடைக்கச்செய்வதாகவோ
சீக்கிரம் திரும்பி விடுவதாகவோ
உன் மூலமாய்த் தொடங்கியது.
நிராகரிக்கப்படுவது.

இப்பொழுதெல்லாம்
உடன் இனம்காணுகிறேன்.
நிராகரிக்கப்பட்டதை.

என்னை நிராகரித்து
எதையோ எதிர்பார்க்கிறவரிடம்
முன்மொழிகிறேன்
உனது பெயரை.

உன் மூலமாய்த்
தொடங்கிய
நிராகரிப்பின் பெருவலியை
தர முயன்று தோற்றவர்க்கெல்லாம்.

................................................................................

உன் காதல்.

படுத்த படுக்கையில்
கண்மூடிக் கிடக்கையில்
சொட்டுச்சொட்டாய் மூத்திரம்
பிரியும்
ஒற்றைக் கணத்தின்
தென்றலை
ஈரத்தை
வாடையை
இன்ன பிறவற்றை
உணர முடியாத
மௌனத்தில் துளிர்க்கும்
ஒருதுளிக்
கண்ணீர்,
வாழும் ஆசை,
எனக்கான பிரார்த்தனை
உன் காதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக