வியாழன், 17 பிப்ரவரி, 2011

தென்மேற்கு பருவக்காற்று... சாமானியர்களின் அதிசயம்.

தென்மேற்கு பருவக்காற்று படம் வெளிவந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. தமிழில் ஒரு வெற்றிப்படம் என்றால் ஒன்று நாயகன் பன்ச் வசனங்களை பேச வேண்டும் அல்லது நாயகி உடைகழற்றுதலில் தாராளம் காட்டியிருக்க வேண்டும். நாயகனுடன் வரும் 40 வயதினை தாண்டிய நண்பர்கள் நாலு பேராவது இருக்க வேண்டும். கண்ணை கூச வைக்கும் பாடல் காட்சிகள் கட்டாயம் வேண்டும். அபத்தமான சண்டைகள் கண்டிப்பாக வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக ஒரு ரத்த வெள்ளக்கதை வேண்டும்.

பாரதி பராசக்தியிடம் வேண்டிக் கேட்ட ஒரு காணி நிலத்தை உழுது, தன் ஓரே மகனுக்காக வாழ்ந்து, ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும். மகனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து விட வேண்டும் என்று தனக்கான உலகத்தை தன் மகனுக்காகவே அமைத்து அதனுள் வாழ்ந்து, அவனுக்காகவே உயிரையும் விட்டு, அவன் வாழ்விடத்தின் உள்ளும் புறமும் தனது மூச்சை விதையாக, வேலியாக, காற்றாக மாறிக் கலையும் தாய்மையின் ஒற்றை பிம்பத்தை சுற்றிய கதையே சீனுராமசாமியின் தென்மேற்கு பருவக் காற்று.

இந்த விமர்சனமே இணையத்தில் தான் எழுதப்படுகிறது. அறிவியலின் எல்லா கண்டுபிடிப்புகளுமே எதாவது ஒரு பழமையின் தொடர்ச்சியை இடம்பெயர்த்து தூர எறிவதாகவே அமையும் என்பது வாழ்வின் அபத்தமான விதி. இன்றைக்கு ஒரு கதை சொல்லியாக தேர்ந்து எடுப்பதற்கு எத்தனையோ களங்களும்,அதன் பரிணாம நீட்சியும் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை தான். ஆனால் தாய்மை....? அதற்கு மாற்றான ஒரு அமைப்பை இயற்கையும் நமக்கு தரப் போவது இல்லை. செயற்கையிலும் அதற்கு விடை இல்லை.

எப்பொழுதாவது பெய்யும் மழை தான் நமது மனசுக்குள் ஒரு காரணத்தை பற்றிக்கொண்டு வெகுகாலத்துக்கு நினைவடுக்குகளில் நீடித்து இருக்கும். அது போன்றதொரு அன்புப் பெருவெள்ளம் தான், இத் திரைப்படத்தில் ஒரு தேனி மாவட்டத்து தாயாக நமது மனசுக்குள் ஆணி அடித்த சித்திரமாய் அமர்ந்து கொள்கிறார் சரண்யா. அவரது ஆரம்ப படங்களான நாயகன், மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது தொடங்கி இன்று வரை கூடிக் கொண்டே போகும் அவரது நடிப்பின் மிளிர்வு இந்தத் திரைப்படத்தில் பன்மடங்கு விரிவடைகிறது.

சரண்யா, தன் மகன் விஜய்சேதுபதி(அறிமுகம்)க்காகவே வாழும் அன்னை. வயலில் வேலை பார்த்து ஒரு வீட்டை கட்டி விட வேண்டும், தன் மகனுக்கு ஒரு கல்யாணம் செய்து விடவேண்டும். இவை தான் சரண்யாவின் லட்சியங்கள். இரவுக்காவல் இருக்கும் சேதுபதி, கிடையில் ஆடுகளை களவு செய்ய வரும் திருடர்குழுவை துரத்திக்கொண்டு ஓட, ஒரு திருடன் அகப்படும்பொழுது, அந்த திருடனின் முகமூடி துணியை விலக்கிப் பார்த்தால்..... அகப்பட்டது திருடி.(வசுந்தரா சியேட்ரா).

அவளை போகவிடுவது சேதுவின் பெருந்தன்மை அல்ல. அது அந்த நேரம் அவனுக்குள் வந்து புகுந்து விட்ட காதல்.. அவள் மீண்டு சென்று விட, ஒரு புறம் ஆடு திருடர்களை தேடும் போலீஸ். உடன் செல்லும் சேது, வசுந்தராவைப் பார்த்து விடுகிறான்.

சேதுவுக்கு தனது உறவிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து (அறிமுகம்) ஹேமலதா நிச்சயம் செய்கிறார் சரண்யா. ஆனால் சேது வசுந்தராவை காதலிப்பதால் திருமணம் நிற்கிறது. ஆடுகளவாணி அருள்தாஸ்(&)குடும்பத்தினர், காவல்துறையிடம் மாட்டாமல் இருப்பதற்காக சேதுவை மிரட்ட அல்லது கொன்றுவிட முடிவெடுக்கிறது. விளை நிலத்தில் ஏற்படும் சண்டை சேதுவும் தாஸும் கட்டி புரள்கின்றனர். கைது செய்யப்படும் தாஸ் மற்றும் அவரது குடும்ப ஆண்கள் ஒரு புறம் சிறைக்கு செல்ல, இதற்குக் காரணமாய் தான் அமைந்து விட்டதற்காக வருந்துகிறான் சேது. இடைவேளையாகிறது.

இரண்டாவது பாதியில் சிறையிலிருந்து வெளிவந்த தாஸ் சேதுவை குத்த வந்த நேரத்தில் குத்து வாங்கி சரியும் சரண்யா, தனது மகனுக்கும் வசுந்தராவுக்கும் திருமணத்தை செய்து வைத்து விட்டு உயிரையும் விட வேறு ஒரு பகையாளியால் தாஸ் கொல்லப்படுகிறான்.

முதல் பாதியில் வசுந்தராவுக்கும் சேதுவுக்குமான காதல் இந்த காலகட்டத்தில் ஒரு ரம்யமான, நாசூக்கான காதல்.. அதை விட ஹேமலதாவின் மண்வாசனை அழகும், அவர் போட்டோவை திருப்பித் தரும் காட்சியும் கவிதையைப் படமாக்கியது போன்ற உணர்வை தருகின்றன.. வஸுந்தரா சியேட்ரா கண்களால் கவி பாடுகிறார். காதலை சொல்வதற்கேற்ற அழகுக் கண்கள்.

நண்பனாக வரும் தீப்பெட்டி கணேசன் ஒரே மாதிரி பேசுவதையும், ஒரே படத்தின் பாத்திரம் போலவே நடிப்பதையும் குறைத்துக் கொண்டால் நல்ல ஒரு இடத்தை அடையலாம்.

படத்தில் எந்த ஒரு கதாபாத்திரமும் நடிகர்கள் என்ற உணர்வே இல்லாமல், ஏதோ மறைத்து வைத்த கேமராவைக் கொண்டு ஒரு வட்டார வாழ்வைப் படம் பிடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது செழியனின் கேமிரா. அறிமுக இசை அமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன் இசை வைரமுத்துவின் அரசாட்சி நடைபெற ஒரு நல்ல களத்தை ஏற்ப்படுத்தித் தந்து உள்ளது. "ஏடி கள்ளச்சி..... கள்ளிக்காட்டில் பொறந்த தாயே" இரண்டும் வெகு காலத்துக்கு நீடிக்கக்கூடிய தரத்தில் இருக்கிறது.

பெரிய பின்புலம் எதுவும் இந்த படத்துக்கு இல்லை. புதிய நடிகர் நடிகையர். புதிய நிறுவனம். இயக்குனர் சீனு ராமசாமிக்கும் இது தான் இரண்டாவது படம். ஆனால் ஒரு தாயை நாயகியாக்கி கதை சொல்லி வென்று இருக்கும் சீனு ராமசாமி, இன்னும் பல யதார்த்த நினைவோவியங்களை திரைப்படுத்துவார் என நம்பலாம்.

மசாலா நெடி இல்லை. மனிதர்களால் செய்ய முடியாத அபத்தங்கள், வீட்டுக்குள் வந்து விடக்கூடாத சைத்தான்களான ஆபாசம், கூச்சல், ரகளை, ரத்தவெறி, சண்டை க்ராஃபிக்ஸ், செட்டிங்க்ஸ் எதுவும் எதுவும் இல்லை. எல்லாம் உண்மை தான்...

ஆனால் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தாய்மையைப் போற்றுகிறது.... தென் மேற்கு பருவக்காற்று. கொண்டாட வேண்டியதும், கொண்டாடப் பட வேண்டியதும் வேறு என்ன இருக்கிறது..?

கொண்டாடுவோம். தென்மேற்கு பருவக்காற்றை. தாய்மையின் பேரன்பை.

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. பரிசுபெற்ற படம் உங்களிடமும் பாராட்டும் பெற்றிருக்கிறதே ... good judgment!

    'சொல்சரிபார்ப்பு’ தேவையா ..?

    பதிலளிநீக்கு