என்னைப் பின்தொடர்கிறாய்.
எனது நாட்குறிப்பை நானற்ற தனிமைகளில்
எடுத்துப் படிக்கிறாய்.
எதையோ தொலைத்து விட்ட பாவனையில்
என் புத்தக அலமாரியை
குடைகிறாய்.
நான் பயணிக்கையில் உடனுக்குடன்
செய்தி சேகரிக்கிறாய்
என் இருப்பு குறித்து.
எனது செல்பேசிக்கு வந்த
குறுந்தகவல்களை
மனனம் செய்கிறாய்.
சுற்றிவளைத்து எதனையோ
கேட்க வந்து மௌனித்து
முழுங்குகிறாய்.
உன் கரங்களில் அடைக்கப்பட்டிருக்கும்
எனது சிறைக்காவலை உறுதி செய்வதற்கே
இத்தனையும் செய்கிறாய்....
விரல்களின் இடைவெளி புகுந்து
மனம் விட்டு மனம் தாவிய
மாயக்குரங்கின் சூட்சுமம் அறியாமல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக