வியாழன், 17 பிப்ரவரி, 2011

எட்டும் மழை

கொட்டி விட்ட கோபமாய்
மழையீரம்
மிஞ்சிய சாலைகளில்.

***

ஊடலின் இறுதி வார்த்தையாய்
இலை தடுக்கி மண்சரியும்
மழை

****

நீ வராமற் போனதற்கு
மழை காரணம்.
நான் வந்து போனதற்கும்.

***

சட்டைக்குள் நீ தந்த
வாழ்த்து அட்டை.
என்னை ஒதுங்கச் சொல்கிறது
மழை.

***

யார் அனுப்பிய
காகிதக்கப்பல்?
என் வாசல் துறைமுகத்தில்..

***

தேடி வரும் ஓரே
தேடல்,
மழை.

***
எண்ணத் தெரியாத பாடகனாய்
எல்லாரையும் நனைக்கும்
மழை.

***

மொழிகளுக்கு
முந்தைய
மௌனத்தின் கூச்சல்
மழை

***

மழை பற்றி
பேசியாயிற்று.
மழையைப்
பேசுதல் முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக